திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.76 திருவேதவனம் (வேதாரண்யம்) - திருவிராகம் பண் - சாதாரி |
கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர் புவிமேல்
மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை
விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே.
|
1 |
பண்டிரைப் வப்புணலி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.
|
2 |
காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகின்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே.
|
3 |
நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்
ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே.
|
4 |
கத்திரிகை துத்திரிக றங்குதடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
|
5 |
மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்
சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே.
|
6 |
வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்
கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.
|
7 |
முடித்தலைகள் பத்துடை முரட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.
|
8 |
வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்
கூசதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.
|
9 |
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
10 |
மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்
சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
பிற்சேர்க்கை 3. திருமறைக்காடு பண் - கொல்லி (பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்) |
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.
|
1 |
முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.
|
2 |
கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.
|
3 |
இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.
|
4 |
பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.
|
5 |
செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.
|
6 |
மதிதுன்றும இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.
|
7 |
நீசனாம் அரக்கன் றிண்டோள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.
|
8 |
மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றரிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.
|
9 |
மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.
|
10 |
மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர் தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |